கவிதைவாசல் கவிமலர்களில் தமிழ்த்தேன் அருந்திட அன்புடன் அழைக்கிறேன்!

வெள்ளி, மே 10, 2013

சுமைதாங்கியிடம்

என்னை நான் வியந்து பார்க்கிறேன்
நெஞ்சு வெடிக்கும் மனச் சுமைகளைக் கூட
தாங்கிக்கொள்ளும் மனோபாவத்தை
இறைவன் எப்படி கொடுத்தானென்று !

எப்படியும் ஏதோ ஒரு விதத்தில்
ஒவ்வொருவருக்கும் மனச் சுமைகள்
இருந்து கொண்டுதான் இருக்கிறது!

சுமைகளை ஏற்றிய பார வண்டியாய்
இமைகளை மூடி ஒரு புத்தனைப்போல்
சும்மா இருத்தலின் சுகம் காணும்
முயற்சியில் தோல்விகளே நிதர்சனம்!

நடைபயணத்தில் தலைமுதல்
பாதம்வரை நரம்புகள் உயிர்த்தெழ
பாரம் பதவி விலகி பயணிக்க ஆரம்பித்தது !

கிராமத்து ஒற்றையடிப் பாதையில்
கம்பீரமாய் நின்ற சுமைதாங்கியில்
சாய்ந்தபடி ஓய்வெடுத்தேன்......
" தலைச் சுமைகளை மட்டுமே
இறக்கிவைக்கின்றனர் " என ஏக்கத்துடன்
முணுமுணுத்த சுமைதாங்கியிடம்
விக்கித்து வலுவிழந்துபோனேன் !


..............கா.ந.கல்யாணசுந்தரம்.

வியாழன், மே 09, 2013

கும்புடுங்க



கத்திரி வெய்யில்
தோள்பட்டை எலும்பை
உருக்கி எடுக்க
தென்னை இளநீர்
விற்றபடி கணவனைப்
பார்த்து மனைவி சொன்னாள் ....
"படிக்கவைக்காத
தென்னம்பிள்ளையை
படம்புடிச்சி தெனமும்
கும்புடுங்க !"

......கா.ந.கல்யாணசுந்தரம்,

புதன், மே 08, 2013

எதிர்வினை ....



ஒரு கனவின் தொடர்
என்னுள் மின்னல் பூக்களை
மலரவிட்டது
தொடரும் தேடுதல்
எதற்காக என்பது மட்டும்
புரியாமல் இருக்கிறது
கைக்கு எட்டியது
வாய்க்கு எட்டாமலே
கனவுகள் முற்றுப்பெருகிறது
வானப்பெருவெளியில்
சிறகை விரித்து பறக்கிறேன்
மனிதநேயமுடன்
பறவைகளின் விசாரிப்புகள்
மனதை குளிர்விக்கிறது
சிகரங்களை நோக்கி
பயணம் தொடர்கிறது
என்னைப் பிடித்து
இழுத்து கீழே தள்ள
அங்கு எவரும் இல்லை.
இருப்பினும் எதிர்வினை
இல்லாததொரு தேசத்தில்
எனது இருப்பிடம்
சிறப்பானதாக தெரியவில்லை.

............கா.ந.கல்யாணசுந்தரம்  

சனி, ஏப்ரல் 13, 2013

சித்திரை மலர்கள்









சித்திரை மலர்கள் மலரட்டுமே
சிந்தனைத் துளிகள் அரும்பட்டுமே
இத்தரை மகிழும் நன்னாளாம்
முத்திரைப் பதித்து வளரட்டுமே

விஜய ஆண்டின் வரவிங்கு
விளைக்கும் ஆயிரம் நலமிங்கு
புதுமைகள் பூத்துக் குலுங்கிடுமே
புன்னகை நம்மில் இலங்கிடுமே

மழலை மொழியிங்கு தமிழென்று
மனதால்  கொள்கை கொண்டிடுவோம் 
தமிழை சொல்லும் தமிழன் இங்கே
தலைநிமிர்ந்து வாழ்வது திண்ணியமே

.............கா.ந.கல்யாணசுந்தரம்


 

செவ்வாய், ஏப்ரல் 02, 2013

அமிழ்தான தமிழ் இன்று வேண்டும்


அமிழ்தான தமிழ் இன்று வேண்டும் - தினம்
அகம் குளிர நான் பாட வேண்டும்
இனிதான சொல் காண வேண்டும் - நம்
இல்லத்தில் கலந்துரையாட வேண்டும்

                                                            (அமிழ்தான )

மம்மி என்றழைக்காது மழலை - இனி
அம்மா என்றிசைக்கட்டும் குழலை
மொழியோடு உறவாடும் நெஞ்சம் - நல்
வழியோடு வளமாக வாழும்

                                                           (அமிழ்தான )

சான்றோர்கள் வளர்த்திட்ட செம்மொழி - வளர்
சான்றாக உடன்வாழும் அருள்மொழி
தாய்மொழி பகல்வதில் தாழ்வில்லை - இளைய
தலைமுறையே இனி பேசிடு தவறில்லை


                                                              (அமிழ்தான )

                                               ..................கா..கல்யாணசுந்தரம். 

வெள்ளி, மார்ச் 08, 2013

பல்லாண்டு வாழ்கவென வாழ்த்துகிறோம்

 
 


மொட்டவிழ்ந்த மலர்போல மழலை முகம்
பொட்டிட்டு பூச்சூடி பார்த்தாலே போதும்
கட்டவிழ்ந்த தாழை மலர் போல அழைப்பாள்
கொட்டுகின்ற அருவியென துள்ளி எழுவாள்
குழல்கூட இசைக்காமல் சற்றே நிற்கும்
மழலை இவள் வாய் மொழியில் தோற்கும்
வண்ணத்து பூச்சியென சிறகடித்து வருவாள்
காண்போரின் கையசைப்பில் கண்சிமிட்டி சிரிப்பாள்
முகமறியா போதிலும் மடிமீது வந்தமர்வாள்
கொடிமுல்லைப் பூவாய் மனம் கவர்ந்திழுப்பாள்
வினோத்குமார் கலைவாணி தம்பதியர
பெற்றெடுத்த வாசமிகு பெரும் செல்வம்
எங்களின் ஆசைமிகு பெயர்த்தி பிரணீ த்தா
மழலையிவள் நேசமிகு பிறந்தனாளின்று
உவகையுடன் பாசமிகு மனதுடனே
பல்லாண்டு வாழ்கவென வாழ்த்துகிறோம்
தாத்தா பாட்டி !
கா .கல்யாணசுந்தரம்
அருள்செல்வி கல்யாணசுந்தரம்
செய்யாறு
09.03.2013



Reply
Forward