கவிமலர்களில் தமிழ்த்தேன் அருந்திட அன்புடன் அழைக்கிறேன்!

வியாழன், செப்டம்பர் 08, 2011

நினைவுகளின் ஆராதிப்பில்






















முப்பது ஆண்டுகளின்
இடைவெளிக்குப்பின்
இனிய பயணமாய்
பிறந்த ஊருக்கு!
கிராமத்து வாசம் மாறினாலும்
புராதான சின்னங்களாய்
பழைய வீடுகள்!

கோளரங்க கூரையின் கீழ்
குண்டும் குழியுமாய் தரை
பொற்கால நினைவுகளில்
புதையுண்டு போனேன்!
அன்புக்கேனியாய்
இன்ப ஊற்றை வற்றாமல்
அள்ளித் தெளித்த
அன்னை இல்லம்
அரவணைத்தது!

ஆட்டுக்கல் குழவியும்,
இன்சுவை சமையலறையும்,
தயிர்ப்பானைத் துளிகளும்,
ஆன்மீகமாய் பூஜையறை மாடங்களும்
அன்னை இல்லத்தின் அன்புச்
சுவடுகளாய் நிலைத்திருக்கிறது!

அம்மா, அப்பா, அக்கா, அண்ணன்
தம்பி, தங்கையென அப்போது
கதவின் பின்புறம் நானெழுதிய
வார்த்தைப் பிழைகளை திருத்திய
அம்மாவின் கையெழுத்தோடு
'தமிழமுதூட்டிய' அன்னையின்
சுவடுகள் அழியாது இன்றும்
நினைவுகளின் ஆராதிப்பில்!



....கா.ந.கல்யாணசுந்தரம்.