கவிமலர்களில் தமிழ்த்தேன் அருந்திட அன்புடன் அழைக்கிறேன்!

வெள்ளி, செப்டம்பர் 30, 2011

கொடியில் பூத்த முல்லை!



இருவர் தந்த அமுதம் - இளம்
காலைப் பொழுதின் குமுதம்!
சின்ன விழிகள் அசைத்து - இவள்
வண்ண கவிதை வடிப்பாள்!
மெல்ல நடந்து வந்து - ஒரு
முத்தம் தந்து சிரிப்பாள்
பேசும் மழலைக் கிள்ளை - இளம்
கொடியில் பூத்த முல்லை!
மொழிகள் அறிந்த உண்மை - பேசும்
மழலைக்கு இணை ஏது?

......கா.ந.கல்யாணசுந்தரம்.

ரணம் ஆறாத வெந்த நெஞ்சோடு....
















சந்தைக்கு செல்லும் பாரவண்டி
சரக்கு மூட்டைகளை ஏற்றியதும்
அசைய மறுத்த எருதுகளை...
அவன் வெறுப்புடன் பார்த்தான்!
கடும் வெயில் காதுகளைக்
குடையும் முன் அடுத்த கிராமத்து
சந்தைக்கு செல்ல வேண்டும்!
சகட்டுமேனிக்கு அடித்த அடியில்
சாட்டைகூட பிய்ந்து போனது!
நேரத்தோடு பறந்து சென்று
நூற்றுக்கணக்கில் வியாபாரம் செய்து
முதலாளியிடம் நல்ல பெயர்
வாங்கியும்கூடமனதில் நிம்மதி இல்லை!
மாலையில் மனைவி குப்பம்மா
பச்சிலையால் எருதுகளின்
சாட்டைத் தழும்புகளுக்கு
பத்து போடும் போது இவன் மட்டும்
ரணம் ஆறாத வெந்த நெஞ்சோடு....
வாயில்லாத ஜீவனாய்
விக்கித்து நின்றான்!

.........கா.ந.கல்யாணசுந்தரம்