கவிமலர்களில் தமிழ்த்தேன் அருந்திட அன்புடன் அழைக்கிறேன்!

வெள்ளி, ஜூன் 08, 2012

சூட்சும நெறிகளை அறியவேண்டும்!




உணர்வுகள் மனித உடலின்
இரசாயனக் கலவை என்பதை
யாவரும் அறிந்ததே!
மனித இதயத்தின் இயக்கங்களை
மன அழுத்தம் கட்டுப்படுத்த இயலும்!
வெளியில் சொல்லப்படாத கவலைகள்
இரத்த நாளங்களை செயலிழக்கச் செய்யும்!
மொத்தத்தில் மனிதன் தனது
மூளையின் ஒழுங்கான செயல்பாட்டில்
இயங்கவிடாமல் வாழ்கிறான்!
செம்மையான சிந்தனைகளாலும்
அமைதி தியானம் போன்ற
அக ஒழுக்கங்களில்
வாழ்நாளை கூட்டவும் செய்யலாம் !
சிரிக்கத் தெரிந்த மனிதன்
வாழ்நாளில் புலம்பும் அவலநிலையை
சிரமேற் கொள்கிறான்!
சும்மா இருத்தலே சுகம் எனும்
ஞானியர் கூற்றில் ஒளிந்திருக்கும்
சூட்சும நெறிகளை அறியவேண்டும்!
மனிதம் வாழத்தான் பிறந்துள்ளது
என்பதை அறிய வேண்டும்!
வீடு பேற்றின் வாயிலைத் தொட
நாடு கடந்து போகத்தேவை இல்லை !
மனம் எனும் உள்ளக் கோயிலின்
மணிக் கதவுகளை சாந்தமெனும்
சாவி கொண்டு திறந்தாலே போதுமானது!

....கா.ந.கல்யாணசுந்தரம்.

புதன், ஜூன் 06, 2012

இனி காத்திருப்பு பயனில்லை...




நானொரு வெற்று காகிதம்தான்
என்றாலும் உன் கரம் பட்டு
காகித ஒடமானேன்!
அலைகளில்லா குளத்தில்
என்னை மிதக்கவிட்டு
வேடிக்கைப் பார்க்கிறாயே!
இது நியாயமா?
ஓடம் ஓடவேண்டும்...
மூழ்கினாலும் கப்பல் அழகென்று
இந்த மானுடம் வர்ணிக்கிறதே!
அலைகள்தான் எங்களின் வாழ்கையை
நிலைப்படுத்தும் ஆயுதம்!
நங்கூரங்கள் கூட பலநேரம்
நம்பிக்கை இழக்கிறது!
நில அதிர்வுகளில் அலைகள்
அரக்க குணம் கொண்டழிக்கிறது!
எங்களுக்கு உறுதுணையாய்
உடன்வந்தாலும் .....
உனது உள்ளமதை நாமறிவோம்!
இலக்குகளின்றி பயணித்தலை
பாய்மரக்கப்பல்கள் அறிந்திருந்தாலும்
மாலுமியின் திறனறிந்து
பயணித்தலே எங்கள் நோக்கம்!
அடி பெண்ணே! உண்மையை சொல்லிவிடு...
சும்மா எங்களுடன் உறவாடாதே...!
உனது எண்ணத் திசைகளை நன்கறிவோம்...!
இனி காத்திருப்பு பயனில்லை...
இனிய பயணிப்பு நம்மோடு பூத்திருக்கு....
பயணிப்போம் இலக்கை நோக்கி!

.......கா.ந.கல்யாணசுந்தரம்