கவிமலர்களில் தமிழ்த்தேன் அருந்திட அன்புடன் அழைக்கிறேன்!

சனி, ஜூலை 28, 2012

முற்றுப்புள்ளி உறவுகள்......




கால்புள்ளியும் அரைப்புள்ளியும்
அவ்வப்போது வைத்து நீட்டித்துக்
கொண்டிருந்தாலும்,
வினாக்குறி வாழ்க்கையில்
எப்போதுமே ஆச்சரியக் குறிகள்!
இருப்பினும் வாழ்ந்துகொண்டிருக்கிறேன்
முற்றுப்புள்ளி உறவுகளுடன்.

......கா.ந.கல்யாணசுந்தரம்

வியாழன், ஜூலை 26, 2012

முடிவில்லா பயணம்....




*எங்களது முடிவில்லா பயணம்

கதிரவனின் ஒளிக்கரங்களுடன்

தாமரை மலர்கள்!

.........கா.ந.கல்யாணசுந்தரம்





செவ்வாய், ஜூலை 17, 2012

நீர்க்குமிழி பயணத்தில்....

@ மன ஏரியில் முகிழ்த்து
அடிக்கடி உடைந்துபோகிறது
எண்ணக் குமிழ்கள்

@ மழை வெள்ளத்தில் மிதக்கும்
நீர்க்குமிழி பயணத்தில்....
நிலைத்திருக்கிறது மானுட வாழ்வு!

@ உடையும் மழை வெள்ள
நீர்க்குமிழி உடையும் போது....
உடன் அழுகிறது மழலை !

@ குளத்து நீரில் மிதக்கும்
தாமரை இலைகளின் வரவுகள்
ஒட்டாத நீர்த்துளிகள்!

@ காகித கப்பல்களின் பயணத்தில்
மழை நீர் ஓடைகள்...
நொறுங்கும் நீர்க் குமிழ்களோடு !

...........கா.ந.கல்யாணசுந்தரம்.

வெள்ளி, ஜூலை 13, 2012

இதய நூலகம்.....




படுக்கையில் படுத்ததும் கண்ணுறங்கி
கனவுலகில் சஞ்சரிக்கும் நாட்கள் குறைந்தன !
ஏதோ ஒன்றை இழந்து மற்றொன்றை தேடும்
படலத்தில் வாழ்க்கை காய்களை நகர்த்துகிறேன்!
ஒளிவு மறைவற்ற எண்ணங்களில்
என்னை நானே ஏமாற்றப்படுகிறேன்!
தீர்க்கமாய் செய்துமுடிக்கும் திறனும்
இப்போதெல்லாம் சோம்பல் போர்வைக்குள்
முடங்கியவாறே செயலிழந்திருப்பது...
நன்றாகவே உணரப்படுகிறது!
ஆரம்பிக்கப்பட்ட வாசல் கோலங்கள்
முடிக்கப்படாமலே சிக்கலாய் முடிவதைப்போல்
முனைப்புகள் தோல்விகளின் விளிம்புகளில் !
ஆனால் ஒன்று மட்டும் தெளிவாய் தெரிகிறது...
மனதின் உறுதியை உடல் ஏற்க மறுக்கிறது!
எண்ணங்களின் விழுதுகள் அவ்வப்போது
விரல் நுனிக்குள் கவிதை வேர்களாய் வியாபித்து....
தடம் பாதிக்கும் ஆற்றலுடன் வெளிப்படுகிறது!
காகிதத் தாட்களுடன் கடைசிவரை வாழ்வதில்
இதய நூலகம் எப்போதும் காத்திருக்கிறது!

..........கா.ந.கல்யாணசுந்தரம்.

புதன், ஜூலை 11, 2012

தியாகத்தின் விளைநிலம் !






என்னை உயிர்ப்பித்த நாள் முதல்
பிம்பங்களின் நடு நடுவே
எனது கண்கள் தேடுகின்றன...
நிஜமான மனதுடைய முகங்களை!
சில நேரங்களில் முகத்தருகே கூட
முத்தமிடுவதுபோல் அன்பான முகங்கள்!
சலிப்பின் விளிம்புகளை தொட்டவாறு
கைதட்டலோடு சில முகங்கள்!
சேட்டைகளை செய்தவாறே எனது
புன்னகைக்கு தவமிருக்கும் புதிய முகங்கள்!
கைநீட்ட எனை எடுத்தணைக்கும்
இருகரமுடைய மனிதங்கள்!
மனித உடல் சூட்டில் எனது சிறுநீர்
சட்டென்று வெளியேற,
வீசி எறியாத குறையாய் பெற்றவளிடம்
தள்ளுகின்ற பல முகங்கள்!
பட்டாடைமேல் மலம் கழித்தாலும்
முகம் சுளிக்காமல் எனைக் கொஞ்சுகின்ற
ஓர் முகம்! - பத்துமாத பந்தம் மட்டுமல்ல!
எனது முகவரிக்குள் எழுத்தாகி ,
உயிர் மெய்யாய் உலவும் தாயெனும்
தியாகத்தின் விளைநிலம்!

............கா.ந.கல்யாணசுந்தரம்.