கவிமலர்களில் தமிழ்த்தேன் அருந்திட அன்புடன் அழைக்கிறேன்!

புதன், டிசம்பர் 21, 2016

ஹைக்கூ நூற்றாண்டு - தமிழ் ஹைக்கூ கவிதைகள்









மனசெல்லாம் ஹைக்கூ கவிதை நூல் வெளியீடு

" மனசெல்லாம் " ஹைக்கூ நூல் வெளியீட்டின் போது சேலம் வாசகன் பதிப்பகத்தாரால் வழங்கப்பட்ட " எழுத்துச் சிற்பி " விருது. விருது வழங்குபவர் ஈரோடு மக்கள் சிந்தனைப் பேரவையின் தலைவர் திரு.ஸ்டாலின் குணசேகரன் அவர்கள் அருகில் எழுத்தாளர் பதிப்பாசிரியர் திரு.லேனா தமிழ்வாணன் அவர்கள்.

புதன், அக்டோபர் 19, 2016

ஞாயிறு, செப்டம்பர் 18, 2016

நவயுக பெண்தான்..........

·        முன்னோர் வகுத்த 
     நெறிமுறையில் ஒரு
மரபின் கலாச்சாரம்

·        சுமைகளின் பகிர்வால்
ஒரு புரிதலின் உண்மை
பூத்துக் குலுங்கும்

·        உனது நிராகரிப்பு இருப்பின்
வக்கிரங்கள் அரங்கேறலாம்
கலந்துரையாடலே விடிவெள்ளி

·        பருவத்தின் பாரம்பரியம்
காதல் வயப்படுதல்
அது ஒருதலையாகவும் இருக்கலாம்

·        அன்போடு நிலைப்பாட்டை
எடுத்தியம்பு
இல்லையேல் காலம்தாழ்த்தாது
காவல்துறையை அணுகு

·        உன்னைப் பின்தொடர்பவர்கள்
எதற்காக என்பதறிவாய்
பாதுகாப்பு வளையத்துக்குள்
வாழக்  கற்றுக்கொள்

·        நவயுக பெண்தான்
ஒப்புக்கொள்கிறேன் ....
நண்பனை தேர்வுசெயும்முன்
ஆய்வுசெய் அவனது நட்புகளை !


........கா.ந.கல்யாணசுந்தரம், சென்னை.

திங்கள், செப்டம்பர் 12, 2016

" கா " விரித்த நீர் இப்போது.........






வங்கிகளை
நாட்டுடமையாக்கியதுபோல்
தேசியமயமாகட்டும்
இந்திய நதிகளும் அணைகளும் !
அரசியல் செய்வோர் அதிகாரமின்றி
தேசிய நதித்துறை
நடுநிலையோடு இயங்கட்டும் !
இந்திய மண்ணின் விளைபொருட்கள்
உலக மாந்தர் நல்வாழ்வின்
உணவுப் பொருட்கள் எனவறிந்து
நீரின்றி அமையாது உலகென்று
உணரும் நாள் எந்நாளோ ?
அணை தேக்கிய நீர்....
நதிநீர் வழிகளுக்கே
சொந்தமென அறிந்திடுவீர் !
" கா " விரித்த நீர் இப்போது
ஆற்றுக்குள் இல்லை....
அது கர்நாடகம் செல்ல
ஓர் மணல் வழிப் பாதையானது !
..........கா.ந.கல்யாணசுந்தரம்

ஞாயிறு, செப்டம்பர் 11, 2016

நவீனத்துவம் ஒரு நகர்தலோடு....




அந்த ஓவியத்துக்குள் 

என்னதான் இருக்கிறது ?
பின்நவீனத்துவ சிந்தனைகளில் 
பிறப்பெடுத்த வடிவமா ?
உதிர்ந்த இறகின் தூரிகையால் 
வரையப்பட்டதா ?
வண்ணங்களின் கூட்டுக் குடும்பமா ?
அப்பிய நிறங்களின் கலவைகளில்
மானுட வடிவங்கள் அம்மணமாய்
ஒரு கோணம் சித்தரித்தது !
பிறந்த மழலைக்கு பாலூட்டும்
அன்னையின் வடிவம் மறுகோணம் !
விரித்த கூந்தலொடு விசும்பும் பெண்ணின்
உருவமெங்கும் சிவப்புத் தழும்புகள்
மொத்தமாய் விசுவரூப தரிசனம்....
அத்தனையும் பின்னிப் பிணைந்திருக்கும்
நவீனத்துவம் ஒரு நகர்தலோடு....
வானரச் சேட்டைகளில்
விழிபிதுங்கும் மந்தியைப்போல்
அங்குமிங்கும் ஓடி அலைந்து
ஒதுக்கப்படுகிறேன்....அந்த
ஓவியக் கண்காட்சி வளாகத்தின்
மூலையில் ...
மனிதநேயமற்ற
ஒரு பிரளயத்தின் வாசம்
இப்போது எனது மூக்கருகில் !
...........கா.ந.கல்யாணசுந்தரம்

புதன், ஆகஸ்ட் 31, 2016

மனம்கொத்திப் பறவைகளின் கூடாகட்டும் !

இருளின் அடர்த்திக்குள்
என்னை முழுவதுமாய்
திணித்துக்கொண்டேன் ...
வெளிச்ச நாட்களின்
வாழ்க்கைப் பக்கங்களை
விளக்கின்றி
படிக்கத் துவங்கினேன்....
திடீரென இருளை
அணைத்துக்கொண்டு
விளக்கொளி உள்ளே
பாய்ந்தது ....
வெளிச்சப் பூக்களை
அள்ளித்தெளித்த
தேவதையாய் இரவின்
கரங்கள் மகிழ்ந்தன...
பகலைவிட இருளை
அதிகம் நேசிக்கிறேன்
காரணம்.....
அப்போதுதான் நெஞ்சம்
மனதின் விசும்பல்களை
அசைபோட்டபடியே
நிம்மதியடைகிறது !
இரவின் கரங்களே....
இப்போதாவது
தெரிந்து கொள்ளுங்கள்
உங்களிடம் இருக்கும்
வெளிச்சஅரும்புகளை
பூக்கவிடாது என்மீது
இருளின் வேர்களை
படரவிடுங்கள்....
அவை எனது
மனம்கொத்திப் பறவைகளின்
கூடாகட்டும் !
.......கா.ந.கல்யாணசுந்தரம்

உதிர்தலின் புனிதம் அறிந்து !

பாதங்களில் மிதியுற்ற 
சருகுகளின் சலசலப்பில் 
எனது பயணிப்பின் திசை
மாற்றியமைகிறது

மணல் தேசமொன்றின்
ஆற்றைக் கடக்க
ஒரு பரிசல் பெண்ணின்
துணையோடு
பயணமானேன்...
மற்றவர்களை மட்டுமே
கரைசேர்க்கும் இவள்
துவண்ட முகத்தோடு
துடுப்புகளால் கையசைத்து
விடைபெற்றாள்

பயனத்திசைகள் எங்கும்
மானுட அவலம்
முடிவின்றி பயணிக்கிறது
மீண்டும் தொடர்கிறேன்
காய்ந்த வனமொன்றின்
சாலையொன்றில்...
இப்போது மௌனித்திருந்தது
சலசலப்பின்றி சருகுகள்
உதிர்தலின் புனிதம் அறிந்து !

........கா.ந.கல்யாணசுந்தரம்.

ஞாயிறு, ஆகஸ்ட் 28, 2016

இல்லறத்தில் நல்லறம் கண்ட நங்கையிவள்



வான்வழி தவழும் நிலவென மழலையிவள்
வாய்முத்தம் சுவைத்திங்கு மகிழ்ந்திடவே....
நிலமதில் பேதையாய் எண்திசையும்
உற்றுநோக்கி வியப்பிலாழ்ந்து நாள்தோறும்  
பெதும்பையாய் தோழியர் பலருடன் ஊஞ்சலாடி.....
காலம் வளர்த்த பயிர் பசுமையுடன் நின்றாடுதம்மா !

கனிமொழி மங்கையிவள் பெண்மையின் சிறப்பறிந்து
நாணித் தலைகுனியும் நங்கையிவள்
கானகத்து வண்ணமயில் பூங்கோதை !  
அன்னநடை பயிலும் மடந்தையின் கைபிடிக்க
மணாளனைத் தேடிப் பெற்றோர் மட்டற்ற மகிழ்வெய்தி
அரிவைப் பருவத்தே பயிர் செய்வர் !

இல்லறத்தில் நல்லறம் கண்ட நங்கையிவள்
கைப்பிடித்த கணவனுடன் தெரிவைத் திறத்தாலே
பேர்சொல்லும் பிள்ளைகளைப் பெற்றெடுப்பர் !
பேரிளம் பெண்ணிவளின் பல்கலை வித்தகத்தால் 
சமுதாயக் கூடமதில் கலாச்சாரத் தூணாக நின்றிடுவாள்
அமுதாக தமிழ் மரபில் இலங்கிடுவாள் குலவிளக்காய் !
     


...............கா.ந.கல்யாணசுந்தரம்

சனி, ஆகஸ்ட் 27, 2016

புத்துலகு கண்டிடுமே பொறுப்போடு !

















தோகை விரித்தாடும்
மயில் போல்
தாவிக் குதித்திடும்
மனது நித்தம் !
புருவவில்லில் 
பார்வைக் கணைகள்
தொடுத்திடும்
ஒரு பருவ யுத்தம் !
வெண்கலச் சிலைபோல்
மேனி மின்னும்
எழிலுரு மாற்றம் தன்னில்...
அறியாது புரியாது
புன்முறுவல் பூக்கின்ற
ஆனந்த மொட்டவிழ்
வசந்த காலம் !
முறைமாமன்
குச்சி நட்டு பந்தலிடும்
மறத்தமிழன்
பண்பாட்டின் நிகழ்விடம் !
பட்டுப் பாவாடையும்
பளபளக்கும் தாவணியும்
பருவத்தின்
வாசலுக்கு மெருகூட்டும் !
மஞ்சள் நீராடி
அகில் சந்தன வாசமுடன்
கொஞ்சுமொழியாளின்
கூடத்து விழாவினில்...
கெஞ்சுகின்ற
விழியோடு காத்திருந்து
தஞ்சமடைந்திடுமே
வாலிப நெஞ்சங்கள் !
மொட்டவிழ் தாமரையாய்
முகம்மலர
நாளொருமேனியும்
பொழுதொரு வண்ணமுமாய் ...
பூப்பெய்திய பருவமினி
பெற்றோரின் அரவணைப்பில்
புத்துலகு கண்டிடுமே
பொறுப்போடு !
...........கா.ந.கல்யாணசுந்தரம்

மனசாட்சியை கூறுபோட்டு

எனது கனவுகளை
பறித்துக்கொண்டு
நிஜங்களை பரிசளிக்க
கடவுள் எதிரே வந்தார்....

இலவசமாய் பெறுவதற்கு
மனம் விரும்பவில்லை
அது விலையில்லா
பொருளாகி என்னிடம்
சோம்பலை தந்தது....
மனசாட்சியை கூறுபோட்டு
அடிமை சாசனத்தில்
கையெழுத்திட வைத்தது....!

காலை எழுந்தவுடன்
மறந்துபோகும் கனவுகளை
மட்டுமாவது விட்டுவையுங்கள்...
மீண்டும் கடவுளிடம்
மன்றாடிக் கேட்டேன் !

கனவுகள் எப்போதும்
இலவசமல்ல
உன்னோடு பிறந்தது ! 
என சொல்லி மறைந்தார்....!
தூக்கம் கலைந்தேன்
அந்த கனவு
மறவா கனவானது !
..........கா.ந.கல்யாணசுந்தரம் 






புதன், ஜூலை 20, 2016

இனி கங்கைக்கரையில்தான் என்று !


அறம் பொருள் இன்பமென
முப்பாலைப் பொழிந்தாய் !
மானுடம் உய்ய உலகுக்கோர்
பொதுமறையை பகன்றிட்டாய் !
செம்மொழியாம் தமிழுக்கு
மகுடமாய் என்றென்றும்உனது திருக்குறளன்றோ !

தன்னலம் கருதா தமிழ்க்காதலன்
தருண்விசையின் முயற்சியில்
கங்கை நதிப்புறத்து நற்றமிழ்
ஆசானாய் நீ கொலுவிருக்கும்
தருணத்தில்......பாவிகள் உன்னை
புறக்கணித்து கருப்புநிற காகிதத்தில்
சுற்றியபடி பூங்காவில் தள்ளினரே !
இன்னா செய்தாரை அவர்நாண
நன்னயம் செய்பவன் நீ......
பொருந்தாது இவையெல்லாம்
இந்நாளில்.....
தமிழினம் கொதித்தெழும்...!
இந்திய தேசியத்தின் நூலென
திருக்குறளை அரசு ஏற்காவிடினும்
சூளுரைப்போம்.....நம் அய்யனின்
திருவுருவம்.....இனி கங்கைக்கரையில்தான் என்று !


.....கா.ந.கல்யாணசுந்தரம்.

வெள்ளி, ஜூலை 15, 2016

நாளொன்றைக் கூறுங்கள்...!!!




தேவைகளை உள்ளடக்கிய
வாழ்வில் அபரிமிதமாக
மனிதம் வாழ்கிறது ...!
பயணிப்பில் இலக்கு
தேவைதான்....
இலக்கின் பாதையில்
தோல்விகள் இருக்கலாம் !
ஆனால் சுயநலத்தின்
முதுகில் சவாரி செய்து
இலக்கினை அடைவதால்
யாருக்கு இலாபம் ?
வெற்றிகளை மட்டுமே
பச்சை குத்திக்கொள்ளும்
மனிதம் எப்போதுமே
அடையாளம் காணப்படுகிறது
ஆம்..............................
சூழலை மறந்த இனத்தோடு !
கொள்கையற்ற அரசியலார்
கால்கழுவி வாழுகின்ற
சுயநலக் கூட்டங்கள்
அவலநிலை மாந்தரின்
அன்றாட வாழ்வுதனை
கூறுபோட்டு விற்கிறது !
எல்லோரும் எல்லாமும்
பெறவேண்டும் !
இங்கு இல்லாமை
இல்லாத நிலை வேண்டும் !
........இதனை மெய்ப்பிக்கும்
நாளொன்றைக் கூறுங்கள்...!!!
.........கா.ந.கல்யாணசுந்தரம்

புதன், ஜூலை 13, 2016

வடுகப்பட்டிமுதல் வால்காவரை ......



என் ஜன்னலின் வழியே
எட்டிப்பார்க்கிறேன்
நேற்றுப் போட்ட கோலம் கூட
ஒரு மௌனத்தின்
சப்தங்களாகிப்போனது !
வானம் தொட்டுவிடும் தூரம்தான்
என்று வைகறை மேகங்களில்
தமிழுக்கு நிறமுண்டென
உனது திருத்தி எழுதிய தீர்ப்புகள்
மறக்கவியலா கல்வெட்டுக்கள் !
பெய்யெனப்பெய்யும் மழையே ....
இந்த தண்ணீர் தேசத்து
எல்லா நதிகளிலும்
எங்கள் ஓடங்கள்
சிகரத்தை நோக்கி
கொஞ்சம் தேநீர் நிறைய வானத்துடனும்
காவி நிறத்தில் ஒரு காதல் செய்கிறது !
மூன்றாம் உலகப்போருக்கு
வில்லோடு வா நிலவே என்றழைக்க ...
ஒரு போர்க்களமும்
இரண்டு பூக்களுமே மீதமிருந்தன !
எனது பழைய பனைவோளைகளை
புரட்டியதில்
குளத்தில் கல்லெறிந்தவர்களை விட
கவிராஜன் கதைகளைக்
கேட்டவர்களே அதிகம் !
இதனால் சகலமானவர்களுக்கும்
வடுகப்பட்டிமுதல் வால்காவரை
சொல்லிக்கொள்ள ஆசைப்படுகிறேன் .....
கள்ளிக்காட்டு இதிகாசம்
உனது இரத்ததானம் !
கருவாச்சி காவியம்
இன்னொரு தேசியகீதம் !
சிறுகதைகளின் சிற்பியே
உன்னைச் செதுக்கினாலும்
அந்தக் கல்லிலிருந்து
உதிரும் கவிதைப்பூக்கள்
விற்பனைக்கல்ல எங்களின் சுவாசத்திற்கு !
தாய்மண்ணின் தமிழுக்கு
உயிராய் வாழும் இந்நூற்றாண்டு கவியே
உளமார வாழ்த்துகிறேன் பிறந்தநாளில்
பல்லாண்டு வாழ்கவென !
.......கா.ந.கல்யாணசுந்தரம்

சனி, ஜூலை 09, 2016

தார்ச்சாலைப் பூக்கள்

தெருவிளக்கு உமிழும் 
வெளிச்ச எச்சிலில் 
இரவு  தன்னை 
கரைத்துக்கொண்டு
விடியலின் வாழ்வுக்கு 
வழிவிடுகிறது 

தார்ச்சாலைப் பூக்கள் 
வியர்வைத்துளிகளின் 
வாசம் பரப்பி 
ஒரு பரபரப்பில் 
தன்னை சிறைவைக்க 
தயாரானது 

எச்சங்களின் வரவால் 
வயிறு புடைத்த 
குப்பைத் தொட்டிகள் 
அட்டை பொறுக்கும் 
சிறுவர்களின் மறுவாழ்வில் 
அங்கம் கொண்டது   

நான்கு சக்கரம் 
இரண்டு சக்கரம் 
மூன்று சக்கரம் 
நாளெல்லாம் உருண்டு 
மானுடத் திசுக்களை 
சுமந்தவாறு 
ஊர்வலத்தை நடத்தின  

வளமிக்க 
விளைநிலங்களை 
மறந்த மனங்கள் 
விடுதலை அறியா 
விருப்பினர்களாக
தூண்டில்  புழுவானார்கள் 

நெரிசல் மிக்க 
நகரத்து விண்வெளியில் 
பறக்க மறந்த
பறவைகள் மட்டும் 
கிராமத்து பாதைகளை 
தேர்ந்தெடுத்தன 

.........கா.ந.கல்யாணசுந்தரம் 

புதன், ஜூன் 22, 2016

புதுயுகம் கண்டிட உடனிருப்போம்

இயல்பாய் படித்திடு என் மகனே !
******************************************************
மதிப்பெண் அதிகம் பெறவேண்டும்
மாநில விருதுகள் பெறவேண்டும்
ஊடக செய்தியில் வரவேண்டும்
உறவுகள் வியப்பில் விழவேண்டும்
இதையே இலக்காய் வாழாமல்
இயல்பாய் படித்திடு என்மகனே
......(மதிப்பெண்)
நாட்டு நடப்பில் பங்கேற்று
நடைமுறை வாழ்வில் விளக்கேற்று
அனிச்சை செயலாய் வாழாமல்
அறிவுப்பூர்வமாய் நடைபோடு
.....(மதிப்பெண்)
உன்னில் இருக்கும் திறனறிவாய்
உலகம் வியக்க வளர்த்திடுவாய்
கன்னல் தமிழை நன்கறிந்து
கவிநூறு கலைகள் காத்திடுவாய்
....(மதிப்பெண்)
வித்தக வாழ்க்கையின் வளமனைத்தும்
புத்தக சுமைக்குள் கிடைக்காது
பெற்றோர் நாங்கள் உணர்ந்துவிட்டோம்
புதுயுகம் கண்டிட உடனிருப்போம்
....(மதிப்பெண்)
..........கா.ந.கல்யாணசுந்தரம் 

செவ்வாய், ஜூன் 21, 2016

தமிழினத்தின் பெருமைதனை

தமிழின் தொன்மையும்
வரலாறும்
கல்வெட்டு சாசனங்கள் !
கலாச்சாரத்தின் படிமங்களாய்
காலத்தால் அழியா
கற்சிலைகள் !

கலைவளர்த்த மன்னர்களின்
கடமையில் விளைந்தன
எழில்மிகு சிற்பங்கள் !
செம்மொழி தமிழென்றும்
மூத்தகுடி தமிழனென்றும்
சொல்லுவது எப்படி ?
தொல்பொருள் ஆய்வுகளால்
துலங்கும் கோயில்
கற்சிலைகள் !

சிலைகடத்தி பிழைத்தல்
தொழில் செய்து
பொருளீட்டும் மூடர் கூட்டம்
தமிழர்தம் தொன்மையை
சிதைக்கும் சீர்கேட்டில்
உலவுகின்றார் !
தமிழினத்து துரோகிகளை
வேரோடு அழித்தொழித்து
சமுதாய நலம்காக்க
அரசியலார் கடும் சட்டம்
தீட்ட வேண்டும் !
தமிழினத்தின் பெருமைதனை
காக்க வேண்டும் !

 ......கா.ந.கல்யாணசுந்தரம்.

வியாழன், ஜூன் 02, 2016

இசையுலகின் இணையிலா மேதை !

இசையுலகின் இணையிலா மேதை !

இறைவனின் இசை அவதாரம் !


இயற்கையின் இதயத்தை தொட்டவன் !


இயல்பின் வெளிப்பாடுகளில்


இமயத்தை முத்தமிட்டவன் !


இலங்கும் புவிமீது இசையின்


இலக்கணத்தை வடித்தவன் !


இன்றல்ல நேற்றல்ல என்றும்


இசையுலகின் சக்கரவர்த்தி !


இளையராஜா- எங்களின்


இதயம்கவர் கள்வன் !


இந்தியத்தாய் பெற்றெடுத்த


இணையிலா தவப்புதல்வன்


இன்னும் இன்னும் வேண்டும்


இவனின் இசை கேட்டு


இன்பம் பருகும் வாழ்நாட்கள் !


இந்த இன்னிசை வேந்தனின்


இனிய பிறந்தநாளில் வாழ்த்துவோம்


இதயம் கனிந்து !




............கா.ந.கல்யாணசுந்தரம்.

செவ்வாய், மே 31, 2016

விடியலைத் தாருங்கள் ...

மக்களால் தேர்ந்தெடுகப்பட்டும்
மதியிழந்து போனார்கள் ...
காலில் விழும் கனவான்கள் !
பரவாயில்லை ...
பொறுத்துக்கொள்கிறோம் !

தொகுதிக்கு வாருங்கள்
உங்களின் காலில் விழுந்து
கெஞ்சாத குறையாய்
காத்திருக்கிறார்கள்
உங்களின் பிரஜைகள் !

அடிப்படை வசதிகூட
காணாத பகுதிக்கு
அவசியம் செல்லுங்கள்...!
குறைகளைக் கேட்டறிந்து
களைந்திடுங்கள் உடனடி தீர்வால் !

அடுத்த வேளை உணவின்றி
உடுத்த துணியுமின்றி வாடும்
அடித்தட்டு மக்களுக்கு நல்லதொரு
விடியலைத் தாருங்கள் ...
அடுத்த ஐந்தாண்டு அருகில்தான் !

.......கா.ந.கல்யாணசுந்தரம்.

வியாழன், மே 26, 2016

கண்டபோதெல்லாம் வாடுங்கள் .....!

அறிவியல் வளர்ச்சியெல்லாம்
அகம் மகிழும் புறவாழ்வு !
ஆன்மீக நெறிகளில்
பேரின்பம் பெருக்கெடுக்கும் !

பொருள் குவிக்கும் செயலினிலே
பூவுலக போதை புதைந்திருக்கும் !
ஆளுமை அகங்கார வாழ்வுதனில்
அடிமைகளை வளர்த்திட்டு
ஆர்பரிக்கும் குணமிருக்கும் !

பாரம்பரிய மரபுகளை மீட்டெடுக்கும்
பணிதனில் பண்புகளே மிஞ்சிடும் !
கல்விதனை வணிகமது தத்தெடுத்தால்
மனித மூளைதனை அடகுவைக்கும்
நிகழ்வுகளே அணிவகுக்கும் !

பாரதத்தின் பெரும்பகுதி
பாரம்பரிய விவசாய நிலமாகும் !
விளைநிலங்கள் அழித்தொழித்து
வாழ்விட மையங்கள் ஆக்காதீர் !

உண்ணும் உணவின் பிறப்பிடம்
அறியா தலைமுறைகளே ....
உணருங்கள் மானுட வாழ்வுதனை !
விவசாய தொழில்நுட்பம் ஏட்டளவில்
இருந்தால் போதுமா?
தகவல் தொழில்நுட்பமும்
மென்பொருள் வளர்ச்சியும்
தானியங்களை தந்திடுமா?

திரும்பிப் பார்த்திடுங்கள் கிராமங்களை ...
பணிக்கொடையாய் விளைநிலங்கள்
தரிசாய் மாறி தரிசனம் தருகின்றன !
பொருளாதார மேம்பாட்டு திட்டமென
அரசியலார் சுருட்டுகின்ற செயலதனை
இனி ஒழிப்போம் ...!



மெத்தப் படித்தாலும் வாழ்வின் மேம்பாட்டில்
இத்தரை காணும் விவசாயமே எனக்கண்டு
அணியணியாய் திரள்வீர் ...!
தனியொருவனுக்கு உணவில்லையெனில்
இனி ஜெகத்தினை எரிக்கவேண்டாம் ....
வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம்
வாடுங்கள் .....!

....கா.ந.கல்யாணசுந்தரம்.