கவிமலர்களில் தமிழ்த்தேன் அருந்திட அன்புடன் அழைக்கிறேன்!

திங்கள், நவம்பர் 13, 2017

நானிலு .... ( தன்முனைக் கவிதைகள் ) தமிழில் முதன் முதலில் புது வரவு

நானிலு .... ( தன்முனைக் கவிதைகள் ) தமிழில் முதன் முதலில் புது வரவு

நானிலு .... ( தன்முனைக் கவிதைகள் ) தமிழில் முதன் முதலில் புது வரவு – தன்முனைக் கவிதைகள் – வடிவமைப்பு – கா.ந.கல்யாணசுந்தரம் – இது தெலுங்கிலிருந்து தமிழுக்கு பயணித்த வடிவம்
********************************************************************************************************************
(கவிஞர் வதிலை பிரபா அவர்களின் மகாகவி மாத இதழில் கவிஞர் சாந்தா தத் அவர்கள் தெலுங்கிலிருந்து தமிழுக்கு “ நானிலு” அறிமுகப்படுத்தினார் – அதன் தாக்கத்தில் எனது முதல் நானிலு – தமிழ்க் கவிதைகள் )
.........கா.ந.கல்யாணசுந்தரம்
நானிலு .... ( தன்முனைக் கவிதைகள் )

·        மை ஊற்றி எழுதிய
தூவல்கள் அலமாரியை
அலங்கரிக்கின்றன
எனது கவிதை வரிகளுடன் 


·        குளத்தில் வீசிய கல்லொன்று
நீர் வட்டங்களைத் தந்தது
எனது கைகளின் வலிக்கு
மருந்தானது

·        முன்பின் தெரியாவிட்டால்
ஒன்றும் கவலைவேண்டாம்
நாம் அமர்ந்து கொண்டது
எதிரெதிர் இருக்கைகளில்

·        தேனிர் கடைக்குள் பறந்து
எனக்கான கோப்பையில்
அமர்ந்துவிட்டுப் போனது
வண்ணத்துப்பூச்சி

·        உனது பயணப் பாதையில்
மலர்கள் உதிர வேண்டும்
எனது மனமெங்கும்
மென்மையின் சுவாசம்

மெல்ல வரும் விடியல்
காலை நடைபயணத்தில்
பனி விலகி மேலெழும்ப
வந்தமரும் பட்டாம்பூச்சி

·        எதிரெதிரே சந்தித்தபின்னும்
எனது மௌன மொழிக்குள்
கவிதை எழுதிச் செல்கிறாள்
ஒரு ரசிகை

·        தூரத்தில் இணையும்
இருப்புப்பாதைகள் அருகில்
அமர்ந்தும் உறவை வெறுக்கும்
மனக் காயங்கள்

·        நூல்கண்டு குறைந்துகொண்டே
வந்தாலும் பறந்தபடி
உயரும் பட்டத்தில்
தெளிவாய் எனது வருங்காலம்

·        எனக்குள் யாசிக்கும்
வார்த்தைகளை தேர்ந்தெடுப்பதில்
முனைப்புடன் நிற்கின்றன
சமுதாய நிகழ்வுகள்  


.........கா.ந.கல்யாணசுந்தரம் 

சனி, ஆகஸ்ட் 05, 2017

இது யாருக்கான தேடல் ?

இது யாருக்கான தேடல் ?
இரவும் பகலும் உறங்காத இதயத்துடன்
உயர்த்திப் பிடிக்கும் நெஞ்சுரத்துடன்
கண்களில் எதிர்காலத்தின்
வண்ணங்களைத் தேக்கியவாறே 
எத்தனை எத்தனை விடியாத பொழுதுகள் !
ஈரைந்து மாதங்கள் கூட ஒரு மலரைத்
தாங்கும் காம்பென சுகமானச் சுமையாகி
தவத்தின் மனோநிலைதான் இருந்தது !
மகனே உனது வளர்ப்பில் செலுத்தும் கவனங்களால்
ஒரு மண்பாண்டத் தொழிலாளியைப்போல்
எனது கவனங்கள் எப்போதுமே இருந்தது !
எப்பொழுதுமே என்னருகில்
உனை இருக்கச் செய்தல் என்பது
எனது இயலா நிலை என்று உணருகிறேன்....
காலத்தின் தேவை என்ன என்பதை
உனது உணர்வுகளால் தெரியப்படுத்துகிறாய்
பிரிதலுக்கான நேரம்தான் என அறிந்தும்
எதிர்பார்ப்பின்றி அன்பின் எல்லைகளை
விரிவுபடுத்தியத்தில் ஆனந்தம் கொண்டேன் !
அதீத கற்பனை வேண்டாம் வாழ்வில்
இயல்பின் வெளிப்பாடுகளை நுகர்வதில் ...
உனக்கான அடையாளங்களை தொலைக்காதே !
உன்னை உணர்ந்துகொண்டபிறகும்
யாருக்காகவும் மாற எப்போதும் நினைக்காதே !
தனித்துவ மேன்மையில் உனது
வெற்றிக் கொடிகள் எப்போதும் பறக்கட்டும் !
இந்த முதியோர் இல்லத்தில்
என்னிடமிருக்கிறது உனக்கான முத்திரை....
நானொரு முலையூட்டி வெப்ப இரத்த
வாழ்வினமே.....!...ஆம் மகனே .....
இது யாருக்கான தேடல் ?
வாழை அடி வாழைதான் இந்த மானுடம் !
..........கா.ந.கல்யாணசுந்தரம்
(உலகத் தாய்ப்பால் வாரம் )

வாழை அடி வாழைதான் இந்த மானுடம் !

இது யாருக்கான தேடல் ?
இரவும் பகலும் உறங்காத இதயத்துடன்
உயர்த்திப் பிடிக்கும் நெஞ்சுரத்துடன்
கண்களில் எதிர்காலத்தின்
வண்ணங்களைத் தேக்கியவாறே 
எத்தனை எத்தனை விடியாத பொழுதுகள் !
ஈரைந்து மாதங்கள் கூட ஒரு மலரைத்
தாங்கும் காம்பென சுகமானச் சுமையாகி
தவத்தின் மனோநிலைதான் இருந்தது !
மகனே உனது வளர்ப்பில் செலுத்தும் கவனங்களால்
ஒரு மண்பாண்டத் தொழிலாளியைப்போல்
எனது கவனங்கள் எப்போதுமே இருந்தது !
எப்பொழுதுமே என்னருகில்
உனை இருக்கச் செய்தல் என்பது
எனது இயலா நிலை என்று உணருகிறேன்....
காலத்தின் தேவை என்ன என்பதை
உனது உணர்வுகளால் தெரியப்படுத்துகிறாய்
பிரிதலுக்கான நேரம்தான் என அறிந்தும்
எதிர்பார்ப்பின்றி அன்பின் எல்லைகளை
விரிவுபடுத்தியத்தில் ஆனந்தம் கொண்டேன் !
அதீத கற்பனை வேண்டாம் வாழ்வில்
இயல்பின் வெளிப்பாடுகளை நுகர்வதில் ...
உனக்கான அடையாளங்களை தொலைக்காதே !
உன்னை உணர்ந்துகொண்டபிறகும்
யாருக்காகவும் மாற எப்போதும் நினைக்காதே !
தனித்துவ மேன்மையில் உனது
வெற்றிக் கொடிகள் எப்போதும் பறக்கட்டும் !
இந்த முதியோர் இல்லத்தில்
என்னிடமிருக்கிறது உனக்கான முத்திரை....
நானொரு முலையூட்டி வெப்ப இரத்த
வாழ்வினமே.....!...ஆம் மகனே .....
இது யாருக்கான தேடல் ?
வாழை அடி வாழைதான் இந்த மானுடம் !
..........கா.ந.கல்யாணசுந்தரம்
(உலகத் தாய்ப்பால் வாரம் )

இதுதான் கார் காலமோ ?

மின்னல் வெட்டிய பொழுதில்
மழைச் சாரல் !
துளிர்த்தலும் உதிர்தலும்
அன்றாட நிகழ்வுகள் ....
தெருவெங்கும் செந்நிற இலைகளால் 
ஒரு சிவப்புக் கம்பள வரவேற்பு !
நீ...நடந்த பாதைகளில்
உதிர்த்த புனகைக் கோட்டின் எல்லைகளில்...
தவம் செய்யும் புல்லின் பனித்துளிகள் !
ஒன்றிரண்டு நனைந்த பறவைகள்
சிறகு விரித்தலில் சிந்தும்
மழைத் துளிகள் ...
இதுதான் கார் காலமோ ?
மங்கிய மாலைப் பொழுதில்
மேற்கு திசை வானம்
கவிழ்ந்து கிடக்கிறது !
மேகங்களைச் சுமந்தபடி
கிழக்கிலிருந்து புறப்பட்ட
ஈரமற்ற உனது குடைக்குள்
இறக்கத்துடன்
ஒரு இதயம் பயணிக்கிறது.....
யாருக்கும் தெரியாமல் !
திண்ணையில் அந்தக் குடையை
மடக்கி வைக்காதே....
அது மரணித்துவிடும் !
...........கா.ந.கல்யாணசுந்தரம்.

வெள்ளி, ஜூலை 07, 2017

ஒரு பூக்கால ஆலாபனை .... *******************************

ஒரு பூக்கால ஆலாபனை ....
******************************************************
(கவிதாஞ்சலி )

நிலவில் இருந்து வந்தவன் என்பதால் 

கடவுளின் முகவரியைக் கேட்டுப் பார்த்தேன்... 
இறந்ததால் பிறந்தவன் என்று சொல்லி 
இது சிறகுகளின் காலம் எனப் பறவையின் பாதையை 
உனது சுட்டுவிரலால் அடையாளம் காட்டினாய் !
விலங்குகள் இல்லாத கவிதைக்கு 
மின்மினிகளால் ஒரு கடிதம் எழுதி....
பூப்படைந்த சபதமாய் முத்தமிழின் முகவரிக்கு 
பால்வீதி சமைத்தாயே !
ஆனால் கண்ணீர்த்துளிகளுக்கு முகவரி இல்லையென 
தேவகானமாய் ஒரு ரகசியப் பூவை 
அந்தச் சிலந்தியின் வீட்டில் சூட்டி மகிழ்ந்தாய் !



பசி எந்த சாதி என முழக்கமிட்டு 
காக்கைக்குச் சோறும் போட்டு....
புதுக்கவிதைக் குறியீட்டில் பித்தனாய் 
வாழ்ந்ததெல்லாம் நேயர் விருப்பமாய்... 
சொந்தச் சிறையின் சுவர்கள் பேசிக்கொள்கின்றன...!
கம்பனின் அரசியல் கோட்பாட்டில் 
நெருப்பை அணைக்கும் நெருப்பாகி 
நெகிழவைத்தாய் !
கரைகளே நதியாவதில்லைதான்.... ஆனால் 
காற்றை உனது மனைவியாக்கிக் காலமெல்லாம் 
முத்தங்கள் ஓயாமால் கொடுத்து வந்தாய் !
அவளுக்கு நிலா என்றும் பெயர் சொல்லி ....
ஒரு பூக்கால ஆலாபனைக்குள்... 
நீயொரு சோதிமிகு நவகவிதையானாய் !


வீட்டின் கதவுகளைக் காயங்கள் என்றே... 
தட்டாதே திறந்திருக்கிறது மனிதநேயமாய் 
என அனைவரையும் வரவேற்ற கவிக்கோவே...
மரணம் ஒரு முற்றுப்புள்ளி அல்ல...
எனச் சொல்லிக்கொண்டே 
விதை போல் விழுந்தவன் நீ...! 
எங்களை அடைகாக்கும் கவிதைப் பறவை நீ ... 
இந்த முட்டை வாசிகளுக்கு....
எம்மொழி செம்மொழியென அடையாளம் 
காண்பித்தவன் நீ....உனது இழப்பில் 
தொலைபேசிகளும் கண்ணீர் சிந்தின...!
வாழும் கவிதைகளில் உறங்கும் அழகனாய் 
உலா வருகிறாய்....
நீ....இல்லையிலும் இருக்கிறாய்....
ஆம்....
இப்பொழுது பாலை நிலாவும் 
உனக்காக ஹைக்கூ பார்வையோடு 
கஜல் ஒளிகளைச் சிந்திக்கொண்டிருக்கிறது !

.............கா.ந.கல்யாணசுந்தரம்.
(கவிக்கோ எழுதிய புத்தகங்கள் மற்றும் கட்டுரைகளின் பெயர்களைக் கொண்டே அவர்களுக்காக நான் எழுதிய அஞ்சலிக் கவிதையை தடாகம் கலை இலக்கிய வட்டம் வெளியிட்டது . நன்றியுடன். )

செவ்வாய், மே 16, 2017

புத்தகம் வேண்டுவோர் தொடர்பு கொள்ளவும்:

1999 ல் இருமொழிகளில் (தமிழ்-ஆங்கிலம் ) வெளியான எனது " மனிதநேயத் துளிகள் " ஹைக்கூ கவிதைகள் இப்போது நம்மொழிப் பதிப்பகம் இரண்டாம் பதிப்பாக (தமிழ் மட்டும் ) சிறந்த வடிவமைப்பில் வெளியிட்டுள்ளது என்பதை மகிழ்வுடன் பகிர்ந்துகொள்கிறேன். நன்றி.
கா.ந.கல்யாணசுந்தரம்
புத்தகம் வேண்டுவோர் தொடர்பு கொள்ளவும்: 
9443259288
புத்தக விலை ரூ. 80/-
(அஞ்சல் வழி பெற ரூ. 100/-)
வங்கிக் கணக்கு:
KALYANASUNDARAM N
UNION BANK OF INDIA
VELACHERY BRANCH
A/C NO: 579002030000004
IFSC UBIN0557901

சனி, மே 13, 2017

வைகையாற்று நாகரீகம் !




வைகையாற்று நாகரீகம் !
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
இந்தியாவின் தொன்மையைப் புரட்டிப்போட்டது
தமிழனின் வைகை ஆற்று நாகரீகம் !
ஆம்....கீழடி அகழ்வாராய்ச்சி
ஐந்தாயிரத்து எட்டுநூறு பாரம்பரிய கலாச்சார
பொருட்களின் கண்டுபிடிப்பு !
சங்ககாலத்து பரிபாடல் மதுரைக்காஞ்சியின்
தொன்மைப் பொருட்களின் களஞ்சியம் !
பட்டினப்பாலையில் உலாவரும் உறைகேணிகளும்
இருந்திட்ட தடயங்களின் இருப்பிடங்கள் !
தமிழ்ப் பிராமி எழுத்துகளால் ஆன மண் ஓடுகள்...
சிந்துசமவெளி ஹரப்பா நாகரீகத்துக்கு இணையான
தொல்லியல் நாகரீகமாய் விரிகிறது தமிழனின்
மண் சார்ந்த உயரிய நாகரீகம் !

பாதியிலே மத்திய அரசு நிறுத்தியதன் விளைவில்
முடங்கிப்போனது தமிழனின் தொல்லியல் வரலாறு !
மதம் சாரா தமிழனின் வாழ்வு முறை
முத்தாய்ப்பாய் விளங்குவதால் மதவாத அரசியல்தான்
முட்டுக்கட்டைப் போட்டதோ ?
நெஞ்சுரமில்லா தமிழக அரசியலார் இருப்பிடத்தில்
தொல்லியலார் அமர்நாத்தின் பணியிடை மாற்றம்
நிகழ்ந்ததில் வியப்பென்ன ?
பழந்தமிழர் வரலாற்று இலக்கிய வாழ்வு
கிமு இரண்டாம் நூற்றாண்டை முந்தியது என
வைகை நதி நாகரீகம் இயம்புகிறது !
அகழ்வாராய்ச்சி அரை குறையாய் நின்றாலும்
மூடி மறைக்க முடியாது தமிழர்தம் தொன்மையை !


............கா.ந.கல்யாணசுந்தரம்  

வெள்ளி, மே 05, 2017

அறிவோம்...மூவரியில் புறநானூறு- 5 **************************************************

அறிவோம்...மூவரியில் புறநானூறு- 5
************************************************************
• மூவேந்தர் சூழ்ச்சியில் மாண்டான்
 பறம்புமலை வேந்தன் 
வள்ளல் பாரி மன்னன்
• அந்த நிலாக்காலத்தில்
இழக்கவில்லை பறம்புமலையும் பாசமிகு தந்தையையும்

• இந்த நிலாக்கால வெண்ணொளியில்
இழந்து வாடுகிறோம்
 எங்களது குன்றுடன் தந்தையையும்
• கபிலரின் அரவணைப்பில்
தந்தையை இழந்த
பாரிமகளிர் அங்கவை சங்கவை
• கபிலரை இழந்த பாரிமகளிருக்கு
நல்லறமோடு இல்லறம் காட்டினார்
 ஔவை மூதாட்டி
..........கா.ந.கல்யாணசுந்தரம்
அற்றைத் திங்கள் அவ்வெண் ணிலவில்
எந்தையும் உடையேம்; எம்குன்றும் பிறர்கொளார்
இற்றைத் திங்கள் இவ்வெண் ணிலவில்
வென்றெறி முரசின் வேந்தர்எம்
குன்றும் கொண்டார்யாம் எந்தையும் இலமே !
(புறநானூறு – 112) .......... பாரி மகளிர் அங்கவை சங்கவை

அறிவோம்...மூவரியில் புறநானூறு- 4

அறிவோம்...மூவரியில் புறநானூறு- 4
************************************************************
பிறப்புநிலை காணாது நற்கல்வி கற்றோர் சிறப்படைவர்... 
அன்னை முதல் அரசன் வரை !
.......கா.ந.கல்யாணசுந்தரம்
உற்றுழி யுதவியு முறுபொருள் கொடுத்தும்
பிற்றைநிலை முனியாது கற்ற னன்றே
பிறப்போ ரன்ன வுடன்வயிற் றுள்ளும்
சிறப்பின் பாலாற் றாயுமனந் திரியும்
ஒருகுடிப் பிறந்த பல்லோ ருள்ளும்
மூத்தோன் வருக வென்னா தவருள்
ஆறிவுடை யோனா றரசுஞ் செல்லும்
வேற்றுமை தெரிந்த நாற்பா லுள்ளும்
கீழ்ப்பா லொருவன் கற்பின்
மேற்பா லொருவனு மவன் கட்படுமே.
(புறநானூறு - 183...........
பாண்டியன் ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன்)


புதன், மே 03, 2017

அறிவோம்...மூவரியில் புறநானூறு – 3

அறிவோம்...மூவரியில் புறநானூறு – 3
******************************************************
* போரில் தோற்று சங்கிலியால்
பிணைத்து சிறைப்படுத்தப்பட்டான்
செங்கணான் நாட்டில் சேரமான்
* யாசித்து பருகும் நீர்வேண்டேன்
தன்மானத்தோடு இறந்தான் சிறையில் ...
சேரமான் கணைக்கால் இரும்பொறை !
* இறந்து பிறந்த குழந்தையோ
 தசைப் பிண்டமோ புதைக்கப்படும்
வீரமிகு வாளால் கீறி !
..........கா.ந.கல்யாணசுந்தரம்
குழவி இறப்பினும், ஊன்தடி பிறப்பினும்,
ஆள் அன்று என்று வாளின் தப்பார்
தொடர்ப்படு ஞமலியின் இடர்ப்படுத்து இரீஇய
கேளல் கேளிர் வேளாண் சிறுபதம்,
மதுகை இன்றி, வயிற்றுத் தீத் தணியத்,
தாம் இரந்து உண்ணும் அளவை
ஈன்ம ரோ, இவ் உலகத் தானே?
(புறநானூறு-74)
பாடியவர்: சேரமான் கணைக்கா லிரும்பொறை

அறிவோம் மூவரியில் புறநானூறு - 2

அறிவோம் மூவரியில் புறநானூறு - 2
****************************************************
புலிபோகிய கல்குகையே தன்வயிறு
பெருமை நவிலும் வீரத்தாய்...
போர்க்களம் தோன்றும் வீரமகன் !
.........கா.ந.கல்யாணசுந்தரம்
(புறநானூறு: 86)
(சிற்றி னற்றூண் பற்றி நின்மகன்
யாண்டுள னோவென வினவுதி யென்மகன்
யாண்டுள னாயினு மறியே னோரும்
புலிசேர்ந்து போகிய கல்லளை போல
ஈன்ற வயிறோ விதுவே
தோன்றுவன் மாதோ போர்க்களத் தானே !
.............காவற்பெண்டு )

அறிவோம்...மூவரியில் புறநானூறு – 1



அறிவோம்...மூவரியில் புறநானூறு – 1
*******************************************************

முரசுகட்டிலில் புலவன் மோசி கீரனார்
கவரிகொண்டு வீசினான்.....
மன்னன் பெருஞ்சேரல் இரும்பொறை !

..........கா.ந.கல்யாணசுந்தரம்

" மாசு அற விசித்த வார்புறு வள்பின்
மை படு மருங்குல் பொலிய, மஞ்ஞை
ஒலி நெடும் பீலி ஒண் பொறி மணித் தார்,
பொலங் குழை உழிஞையொடு, பொலியச் சூட்டி,
குருதி வேட்கை உரு கெழு முரசம்
 மண்ணி வாரா அளவை, எண்ணெய்
நுரை முகந்தன்ன மென் பூஞ் சேக்கை
அறியாது ஏறிய என்னைத் தெறுவர,
இரு பாற்படுக்கும் நின் வாள் வாய் ஒழித்ததை
அதூஉம் சாலும், நல் தமிழ் முழுது அறிதல்;
 அதனொடும் அமையாது, அணுக வந்து, நின்
மதனுடை முழவுத்தோள் ஓச்சி, தண்ணென
வீசியோயே; வியலிடம் கமழ,
இவண் இசை உடையோர்க்கு அல்லது, அவணது
உயர் நிலை உலகத்து உறையுள் இன்மை
 விளங்கக் கேட்ட மாறுகொல்
வலம் படு குருசில்! நீ ஈங்கு இது செயலே?"

(புறநானூறு - 50) .......மோசி கீரனார்